அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!
அரசன் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசன் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் புதிய படம் அரசன். வடசென்னை படத்துடன் இணைந்த கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகி வருவதாக வெற்றிமாறன் தெரிவித்ததைத் தொடர்ந்து இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை இந்தாண்டு திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டு, விரைந்து படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் முடிவெடுத்திருந்த நிலையில் சிலம்பரசன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.
Advertisement
இதனை, டி. ராஜேந்தர் உறுதிபடுத்தியிருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ஆடியோவில், “வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க சிலம்பரசனுக்கு ஐசரி கணேஷ் முன்பணம் அளித்திருந்தார். அப்பணம் தொடர்பாக நடந்த நீதிமன்ற வழக்கிலும் அப்பணம் சிலம்பரசனுக்குதான் என தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இதனை மதிக்காமல் ஐசரி கணேஷ் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து அரசன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஐசரி கணேஷுக்குத் தர வேண்டிய ரூ. 6.5 கோடியில் ரூ. 4 கோடியை சிலம்பரசனும் மீதமுள்ள தொகையை அரசன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அரசன் படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசனுடன் வெற்றிமாறன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.