அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஐசரி கணேஷ்!
மருத்துவக் கல்லூரி அனுமதிக்கு லஞ்சம் கொடுத்த புகார் தொடர்பாக அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கை ஐசரி கணேஷ் வாபஸ் பெற்றுள்ளது பற்றி...
அமலாக்கத் துறை வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வியாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஐசரி கணேஷுக்கு சொந்தமாக திருவள்ளூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்க முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாக இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.
அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
அந்த மனுவில், ஏற்கெனவே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரசு மருத்துவர் பாலாஜிநாத், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்மீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை, விசாரணையில் வழக்கு தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி வழக்கை முடித்துவைத்து ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அறிக்கை அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் முடித்துவைக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென ஐசரி கணேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை விசாரணை நீதிமன்றம் இதுவரை ஏற்றுக்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணை நீதிமன்றம் அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்த பிறகு, இந்த வழக்கை தாக்கல் செய்ய அனுமதிப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை வாபஸ் பெறுவதாக ஐசரி கணேஷ் தரப்பில் தெரிவித்ததை ஏற்ற நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Isari Ganesh withdrew the case against the Enforcement Directorate
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.