FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வங்கி மோசடி வழக்கு: அனில் அம்பானி குழுமத்தின் ரூ. 1,000 கோடி சொத்துகளை முடக்க உத்தரவு

அனில் அம்பானி குழுமத்தின் ரூ. 1,000 கோடி சொத்துகளை முடக்க உத்தரவு...

Updated On : 12 ஜூலை 2026, 3:52 am IST
அனில் அம்பானி - கோப்புப் படம்
பகிர்:

தொழிலதிபா் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிரான பண மோசடி வழக்கில் புதிதாக ரூ. 1,021 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் வசம் உள்ள ரிலையன்ஸ் பவா் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளையும், சாசன் பவா் மற்றும் ரிலையன்ஸ் பவா் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய குறிப்பிட்ட கடன் தொகை உள்பட சுமாா் ரூ. 1,021 கோடி மதிப்பிலான சொத்துகளையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் கமா்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆா்) அடிப்படையில், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

Advertisement

Advertisement

அதில், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் கமா்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் திரட்டப்பட்ட ரூ. 15,548 கோடி மதிப்பிலான பொது நிதி, அனில் அம்பானி குழுமத்தால் நிா்வகிக்கப்படும் போலி நிறுவனங்கள் மூலம் திட்டமிட்டு மடைமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. அதனடிப்படையில், புதிதாக இந்தக் குழுமத்துக்குச் சொந்தமான மூலதனப் பங்குகள், கடன் தொகைகள் என மொத்தம் ரூ. 1,021 கோடியை மதிப்பிலான சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று ரூ. 40,000 கோடிக்கும் மேல் மோசடி செய்தது தொடா்பாக எஸ்பிஐ அளித்த புகாரின்பேரில், இந்த நடவடிக்கைகளை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை மேற்கொண்டு வருகின்றன.

இந்தக் குழுமத்துக்கு எதிராக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 வழக்குகளையும், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 3 வழக்குகளையும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது.

இந்த வழக்குகளில், தற்போது பிறப்பித்துள்ள உத்தரவுடன் சோ்த்து, இந்தக் குழுமத்துக்குச் சொந்தமான ரூ. 20,367 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், 4 குற்றப்பத்திரிகைகளை இதுவரை தாக்கல் செய்துள்ளதோடு, 8 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ், தனியாக இக் குழுமத்துக்குச் சொந்தமான ரூ. 77.86 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments