அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அலுவலகமானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
புதுதில்லி: மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அலுவலகமானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அலுவலகமானது ஒரு பொது அலுவலகம் என்றும், அரசியல் சட்டத்தின்படி கட்டுப்படுத்தப்படும் ஒரு அமைப்பு என்பதால் அது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வர வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றமானது கடந்த வருடம் மார்ச் 10-ஆம் தேதியன்று அளித்த தீர்ப்பில் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என்று தீர்ப்பளித்தது.
Advertisement
இதனை எதிர்த்து மத்திய சட்ட அமைச்சகமானது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னால் மேல் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ரோகினி மற்றும் ஜெயந்த் நாத் அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பில், ' அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தைப் பொறுத்த வரை அடிப்படையாக மத்திய அரசுக்கு சட்ட நுணுக்கம் தொடர்பான விவகாரங்களில் ஆலோசனை சொல்வது மற்றும் மத்திய அரசுக்காக நீதிமன்றங்களில் ஆஜராவது ஆகியவையே முதன்மை செயல்பாடுகளாக இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
மேலும் அரசுக்கு ஒரு வழக்கறிஞராக செயல்படும் அட்டர்னி ஜெனரல் அலுவலகமானது அரசுடன் நெருக்கமான தொடர்பிலிருக்கிறது. எனவே தனனிடம் இருக்கும் ஆவணங்களை அது பொதுவெளியில் எளிதாக பகிர முடியாது.
எனவே இது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எங்களால்முழுமையாக ஏற்க இயலாது எனவே அட்டர்னி ஜெனரல் அலுவலகமானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று கருதுகிறோம் என்று அந்த தீர்ப்பினில் தெரிவிக்கப்பட்டிருந்தது.