'பசுக் காவலர்களின்' வன்முறைக்கு பாதுகாப்பு தரக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
பசுக் காவலர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் உள்பட இதுபோன்ற வன்முறைக் குழுவினர் எவரையும் பாதுகாக்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா'பசுக் காவலர்களின்' வன்முறைக்கு பாதுகாப்பு தரக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
பசுக் காவலர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் உள்பட இதுபோன்ற வன்முறைக் குழுவினர் எவரையும் பாதுகாக்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பசுக் காவலர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் உள்பட இதுபோன்ற வன்முறைக் குழுவினர் எவரையும் பாதுகாக்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 'கௌ ரக்ஷா' என்று கூறப்படும் பசுக் காவலர் அமைப்பினர் பசுக்களை வெட்டுவதற்காக எடுத்துச் செல்வதாகக் கூறியும், மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறியும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு சிலர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் மனு: இது தொடர்பாக சமூக ஆர்வலர் தெசீன் பூனாவாலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் ம ôதம் மனு தாக்கல் செய்தார். அதில், பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி தன்னிச்சையாக சில குழுவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக தலித், சிறுபான்மையினர்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் பொது அமைதியைக் குலைக்கின்றனர் என்று பிரதமர் மோடியும் கண்டித்துள்ளார். எனினும், பசுக் காவலர்களால் நாட்டில் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை எழுந்து வருகிறது. நாட்டில் வாழும் வெவ்வேறு பிரிவு மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் அந்த பசுக் காவலர் குழுவினர் செயல்படுகின்றனர். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
மத்திய அரசு ஆதரிக்கவில்லை: இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறியதாவது:
சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையீடு எதுவும் இல்லை. சட்டவிதிகளின்படி இந்திய யூனியனில் பசு பாதுகாப்பு அமைப்பு போன்ற குழுவினர்களுக்கு இடமில்லை. தனிநபர்கள் நடத்தும் இதுபோன்ற குழுக்களுக்கு மத்திய அரசு எவ்வித ஆதரவும் அளிப்பதில்லை என்றார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு: இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசுடன் தொடர்புடையது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுக் காவலர்கள் அமைப்பு உள்பட இதுபோன்ற வேறு எந்த அமைப்பினரையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக் கூடாது.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்த அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை செப்டம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.