நேரு குடும்பத்தால் தான் காஷ்மீரில் பிரச்னை: பாஜக சாடல்
காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரச்னனைகளுக்கு நேருவும் அவரது குடும்பமும் தான் முக்கிய காரணம் என பாஜக தலைவர் சுதான்ஷூ திரிவேதி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரிவினைவாத பிரச்னைகளுக்கு ஜவஹர்லால் நேரு குடும்பமும், ஃபரூக் அப்துல்லா குடும்பமும் தான் முக்கிய காரணம் என பாஜக தலைவவர்களில் ஒருவரான சுதான்ஷூ திரிவேதி குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஃபரூக் அப்துல்லாவின் கருத்து மிகவும் மோசமாகவும், கண்டிக்கத்தக்க வகையிலும் உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இதுவரை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவதற்கு நேரு மற்றும் அவரது குடும்பமும், ஃபரூக் அப்துல்லா குடும்பமும் தான் முக்கிய காரணம் என்றார்.
Advertisement
அவரது கருத்தை சக பாஜக தலைவர்களில் ஒருவரான திலீப் கோஷ் வழிமொழிந்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது:
ஃபரூக் அப்துல்லா அரசியலுக்கு தேவையற்றவர். அவரது கருத்துக்கள் எல்லாம் காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவானதாகவே இருக்கும். எனவே அவரது கருத்துகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
அவரது கருத்துக்களை போலவே ஃபரூக் அப்துல்லாவையும் நம்பக் கூடாது. அது இந்திய இறையாண்மைக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றார்.
முன்னதாக, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவின் உதவியை இந்தியா நாட வேண்டும் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.