பனாமா ஆவணக் கசிவு விவகாரத்தில் மோடி மௌனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
வானொலியில் "மனதின் குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் ஊழலை நீக்க வேண்டும் என்று பேசும் பிரதமர் நரேந்திர மோடி, பனாமா ஆவணக் கசிவு விவகாரம் குறித்து பேசாமல் மௌனம் காப்பது ஏன்?
வானொலியில் "மனதின் குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் ஊழலை நீக்க வேண்டும் என்று பேசும் பிரதமர் நரேந்திர மோடி, பனாமா ஆவணக் கசிவு விவகாரம் குறித்து பேசாமல் மௌனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஊழலை வேரறுக்க வேண்டும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மிக நீண்ட நேரம் பேசுகிறார். ஆனால், பனாமா ஆவணக் கசிவு குறித்து மௌனம் காக்கிறார்.
பனாமா ஆவணத்தில் சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் மற்றும் அவரது மகனும், மக்களவை உறுப்பினருமான அபிஷேக் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்று காங்கிரஸ் துணைத் தலைவர்
ராகுல் காந்தி குறிப்பிட்டுப் பேசியிருந்தார். ஆனால், அவர்கள் இருவர் மீதும் பிரதமர் மோடி இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? இந்த விவகாரத்தில் பாகிஸ்தானிடம் இருந்து மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் (பனாமா ஆவணத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கின் முடிவில் அவரிடம் இருந்து பிரதமர் பதவியை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பறித்தது).
குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருகிறது. இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது? இதுபோன்ற பல கேள்விகளுக்கு மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மோடியிடம் இருந்து எந்த பதிலையும் பெற முடியவில்லை.
வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயப் பிரச்னை போன்ற விவகாரங்கள் குறித்து அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுவதில்லை. அடிப்படைப் பிரச்னைகள் குறித்து அல்லாமல் சம்பந்தமில்லாதவை குறித்து பிரதமர் பேசி வருகிறார் என்றார் பவன் கெரா.