தோல்விகளை மறைக்க மத்திய அரசு புதிய பிரச்னைகளை உருவாக்குகிறது
தனது தவறான முடிவுகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்து வருவதை மறைக்க, மத்திய அரசு புதிய பிரச்னைகளை உருவாக்கி வருவதாக காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர்
தனது தவறான முடிவுகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்து வருவதை மறைக்க, மத்திய அரசு புதிய பிரச்னைகளை உருவாக்கி வருவதாக காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வியாழக்கிழமை குறிப்பிட்டுள்ளதாவது:
வீழ்ச்சியடைந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம்; அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம். இந்த அடிப்படைத் தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைத் திருப்ப, மத்திய அரசு புதிய புதிய பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டே வருகிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பதிவுடன் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான கடந்த நிதியாண்டின் கடைசி 3 மாதங்களில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதமாக விழ்ச்சியடைந்ததையும், இதனால் 'உலகில் மிக வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடு' என்ற அந்தஸ்தை இந்தியா இழந்ததையும் குறிப்பிடும் செய்தியை ராகுல் காந்தி இணைத்திருந்தார்.
கடந்த ஆண்டு புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்த மத்திய அரசின் நடவடிக்கை, 'சட்டப்பூர்வக் கொள்ளை, இணையற்ற படுதோல்வி' என்று வருணித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அந்த நடவடிக்கை காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்று
கணித்துக் கூறியிருந்தார்.