பருவநிலை ஒப்பந்தம்: இந்தியா பின்வாங்காது: பிரதமர் உறுதி
பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தியாபருவநிலை ஒப்பந்தம்: இந்தியா பின்வாங்காது: பிரதமர் உறுதி
பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னதாக, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் பயனடைவதாகவும், அமெரிக்கா பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டிய அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், மோடி இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியா உறுதி: ரஷிய சுற்றுப் பயணத்தில் அவர், பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் வெள்ளிக்கிழமை பேசினார். ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும் பங்கேற்ற இந்த மாநாட்டில், அமெரிக்காவை பெயர் குறிப்பிடாமல் மோடி பேசினார். அவர் கூறியதாவது:
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் இந்தியா தொடர்ந்து உறுதியாகச் செயல்படும். ஏனெனில், இது நமது எதிர்காலத் தலைமுறையை பாதிக்கும் முக்கியப் பிரச்னை. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியா, இயற்கையை பாதிக்கும் எந்த செயலுக்கும் ஆதரவு அளிக்காது.
இப்போதும்... எப்போதும்...: இப்போது மட்டுமல்ல, எப்போதுமே நான் இதைத்தான் கூறுவேன். பருவநிலை மாற்ற விவகாரத்தில் இந்தியா மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும். கடந்த 2015-ஆம் ஆண்டில் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் முன்பே, சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா 5000 ஆண்டு பாரம்பரியத்தைக் கொண்டது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தனித் துறை உருவாக்கப்பட்டது என்றார் அவர்.
அமெரிக்கா பக்கம் சாயுமா?: தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோதும் மோடி இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா, அமெரிக்காவின் நிலைப்பாட்டை பின்பற்றுமா? அல்லது பாரீஸ் ஒப்பந்தத்தை ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, 'நான் எந்த வழியில் செல்வேன் என்பது ஒரு கேள்வி அல்ல. ஆனால், நிச்சயமாக பருவநிலை மாற்ற பாதிப்புகளில் இருந்து எதிர்கால சந்ததிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். அடுத்த தலைமுறையினர் சுவாசிக்க சுத்தமான காற்றையும், சுகாதாரமான வாழ்வியல் சூழலையும் விட்டுச் செல்வது நமது கடமை' என்று மோடி பதிலளித்தார்.
முதலீட்டுக்கு வானமே எல்லை: முன்னதாக, இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
120 கோடி மக்களைக் கொண்ட மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருகிறது. இந்தியாவில் விவசாயம் முதல் பாதுகாப்புத் துறை வரை முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் அரசியல் நிலைத்தன்மையும், சிறப்பான நீதித் துறையும் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய வானமே எல்லையாக உள்ளது.
ஒரு தோட்டா கூட பாயவில்லை: இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்னை இருப்பது உண்மைதான். ஆனால், இந்த பிரச்னை காரணமாக கடந்த 40 ஆண்டுகளில் இந்திய-சீன எல்லையில் ஒரு துப்பாக்கி தோட்டா கூட பாயவில்லை. உலக நாடுகள் ஒன்றை மற்றொன்று சார்ந்து இருக்கும் சூழ்நிலை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது என்றார்.
பாகிஸ்தான் மீது தாக்கு: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதி அளிப்பதைத் சுட்டிக்காட்டிப் பேசிய மோடி, 'பயங்கரவாதம் என்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியும், ஆயுதங்களும் கிடைப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அவர்களின் தகவல் தொடர்புகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும்' என்றார்.
அமைச்சர் கருத்து: இதனிடையே, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை தொடர்ந்து நிறைவேற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. கோரிக்கை: பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து உலக நாடுகள் விலகக் கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
'பருவநிலை மாற்றத்தைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம். உலகில் உள்ள அனைத்து நாடுகளின் இதற்காக தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பருவநிலை மாற்றம் என்பது உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது' என்று அவர் கூறியுள்ளார்.