முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தை தொடர்ந்து சிறுமைப்படுத்துகிறது மோடி அரசு: சீதாராம் யெச்சூரி

""நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து சிறுமைப்படுத்தி வருகிறது; இது, நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்

Updated On : 27 மார்ச், 2017 at 4:18 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM

""நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து சிறுமைப்படுத்தி வருகிறது; இது, நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்ர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை வந்த அவர், மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு, ஹிந்துத்துவக் கொள்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திணிக்க முயன்று வருகிறது. தேர்தலுக்கு முன் ஒருவிதமாகப் பேசும் பாஜக தலைவர்கள், தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதற்கு எதிராகச் செயல்படுகின்றனர்.
சமூகக் கட்டமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளுக்கும் மத்திய அரசு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தை மத்திய அரசு தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில், அண்மையில் 40 மசோதாக்களை, மாநிலங்களவையில் விவாதமின்றி, நிதி மசோதாவாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அதில், அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் செலுத்தும் நன்கொடையின் உச்ச வரம்பை நீக்கும் மசோதாவும் ஒன்றாகும். மேலும், அந்த மசோதாவில், எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுக்கப்படுகிறது என்பதை பெரு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்ற பிரிவும் நீக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சிகளுக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை கொடுத்துள்ளது என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியாது.
இந்தப் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.