கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை ஏப்ரல்-27 வரை நீட்டிப்பு!
ஐஎன்எக்ஸ் மீடியா கருப்புப் பண முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் தடை உத்தரவிட்டுள்ளது.
புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா கருப்புப் பண முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் தடை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தில்லி உயர் நீதிமன்றம் விதித்த தடை கடந்த திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
முன்னதாக, அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வழக்குகளில் ஒரு நபரைக் கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து இரு உயர் நீதிமன்றங்கள் இடையே வேறுபட்ட கருத்துகள் உள்ளன. எனவே, இது தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க இருப்பதாக தெரிவித்தது.
Advertisement
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத் துறைக்கு இருப்பதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். எனினும், கார்த்தி சிதம்பரத்தை ஏப்ரல் 2-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையும் அதே நாளில் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
அதன்படி இந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நீட்டித்த உச்ச நீதிமன்றம், வழக்கையும் அன்றைக்கே ஒத்தி வைத்து உத்தரவிட்டது.