முகப்பு
இந்தியா

இன்று நாடு தழுவிய போராட்டம்: பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவு

நாடு தழுவிய போராட்டத்துக்கு (பாரத் பந்த்) சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 1:14 AM
பகிர்:

நாடு தழுவிய போராட்டத்துக்கு (பாரத் பந்த்) சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:
கல்வி, வேலை வாய்ப்பில் ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில அமைப்புகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 10), நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், எந்தவித அசம்பாவிதமும் நேரிடாத வகையில், தடை உத்தரவு பிறப்பிப்பது உள்பட தேவையான அனைத்து ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம்-ஒழுங்கு நிலையை உறுதிசெய்வதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மட்டுமே பொறுப்பாளர்கள் ஆவர். எனவே, தங்கள் நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதியில் வன்முறை நிகழ்ந்தால் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நீர்க்கச் செய்துவிட்டதாகக் கூறி, தலித் அமைப்பினர் கடந்த 2-ஆம் தேதி நடத்திய நாடு தழுவிய போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில், 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.