லக்னௌ: காதலர் தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சுற்றித் திரிந்தால் ஒழுங்கு நடவடிக்கை என்று முதலில் அறிவித்த லக்னௌ பல்கலைகழகம், பின்னர் பல்கலைகழகத்தின் உள்ளே மாணவர்களை அனுமதிக்காத வினோத சம்பவம் நடந்துள்ளது.
புதனனன்று உலகெங்கும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், லக்னௌ பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை செவ்வாயன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருந்தாவது:
மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மணவர்கள் பிப்ரவரி 14-ம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடுகின்றனர். ஆனால் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த சிறப்பு வகுப்பும் நடைபெறாது.
முன்னரே திட்டமிடப்பட்டுள்ள பிராக்டிகல் வகுப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும். எனவே தொடர்பற்ற பிற மாணவர்கள் யாரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாளை வரக்கூடாது.
மாணவர்களை அவர்களின் பெற்றோர்களும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பக் கூடாது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் ஜோடியாக உட்கார்ந்திருந்தாலோ நடமாடினாலோ, பெண்களைப் பார்த்து கேலி செய்தாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த சுற்றரிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் புதனன்று லக்னௌ பல்கலைகழகத்தின் உள்ளே மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு எந்த விளக்கமும் நிர்வாகத்தின் தரப்பில் கொடுக்கப்படவும் இல்லை.