முகப்பு
இந்தியா

ஆதார் தகவல் கசிவைத் தடுக்க வருகிறது புதிய ’விர்ச்சுவல்’ அடையாள அட்டை! 

ஆதார் அட்டை தொடர்பான விவரங்கள் பாதுகாப்பற்ற நிலையிலிருப்பதாக எழுந்துள்ள குற்றசாட்டினைத் தொடர்ந்து, புதிய விர்ச்சுவல் அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் தற்பொழுது  அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:57 AM
பகிர்:

புதுதில்லி: ஆதார் அட்டை தொடர்பான விவரங்கள் பாதுகாப்பற்ற நிலையிலிருப்பதாக எழுந்துள்ள குற்றசாட்டினைத் தொடர்ந்து, புதிய விர்ச்சுவல் அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் தற்பொழுது  அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் மூலமாக நாடு முழுவதும் 90 சதவீதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஆதார் அட்டையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 12 இலக்க பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதார் அட்டை மூலம் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் ஆதார் அட்டை தொடர்பான விவரங்கள் பாதுகாப்பற்ற நிலையிலிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்து வருகிறது. 500 ரூபாய்க்கு ஆதார் விவரங்கள் கிடைப்பதாக கூறி அது பற்றிய தகவல்களை, மும்பை பத்திரிக்கையாளர் ஒருவர் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார்

இந்நிலையில், குடிமக்களின் தனிநபர் ரகசியங்கள் காக்கப்படும் நோக்கத்துடன், குறைவான தகவல்களை மட்டுமே கொண்ட, தற்காலிக விர்ச்சுவல் (மெய்நிகர்) அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனைப் பயன்படுத்தி மொபைல் போன் சிம்கார்டு உள்ளிட்டவற்றிற்கு ஆதாரமாக அளிக்க இயலும். எனவே ஆதாரில் பதிவு செய்துள்ள முழு விவரங்களின் ரகசியம் வெளியாகக்கூடும் என்ற அச்சம் எழாது. பயனாளர்கள் இணையதளத்தில் இருந்து, குறைந்த தகவல்களுடன் கூடிய இந்த மெய்நிகர் அடையாள அட்டையை தாங்களே உருவாக்கி தரவிறக்கிக் கொள்ள இயலும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்க இந்த அடையாள அட்டை தற்காலிகமான ஒன்றாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.