தில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கு இடையிலான மோதல் தொடங்கியது. இந்த மோதல் விவகாரத்தில் தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் தில்லியின் நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆம் ஆத்மி இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 15 நாட்கள் விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை காலை வரலாற்றில் முக்கியம் வாய்ந்த தீர்ப்பை வழங்குகிறது.
கடந்த ஜூன் 11-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவையில் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜரிவால் எச்சரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, 4 மாதங்களாக பணிப்புறகணிப்பு செய்யும் தில்லி அரசில் பணிபுரியும் உயர்அதிகாரிகள் மீது துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையில் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் அமைச்சர்கள் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.