முகப்பு
இந்தியா

பாஜக மீது வாக்காளர்கள் கோபத்தில் உள்ளனர்: காங்கிரஸ் தலைவர் ராகுல்

மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்தின் மீது வாக்காளர்கள் கோபத்தில் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

Updated On : 14 மார்ச், 2018 at 5:57 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:58 PM

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், அம்மாநில முதல்வராக கடந்த ஆண்டு தேர்வானதைத் தொடர்ந்து, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல், துணை முதல்வராக தேர்வான கேசவ் பிரசாத் மௌர்யா, பூல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து இவ்விரு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில், இரு மக்களைவை தொகுதிகளிலும் சமாஜவாதி தொடர்ந்து முன்னிலை பெற்று, பூல்பூர் தொகுதியை கைப்பற்றியுள்ளது. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதுபோல பிகாரில் உள்ள ஆராரியா மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அங்கு எதிர்கட்சியாக உள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இந்த இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது நாட்டிலுள்ள வாக்காளர்கள் ஆளும் பாஜக அரசு மீது கடும் கோபத்தில் இருப்பது தெரிகிறது. அதனால் தான் பாஜக அல்லாதவர்களை வெற்றிபெற வைத்துள்ளனர். 

இதில் வெற்றிபெற்றுள்ள வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் அனைவருக்குமான அரசை அமைக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் அது ஒரு இரவில் நடந்துவிடாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.