பேராசிரியர் பாலியல் தொல்லை: பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற ஜேஎன்யூ மாணவர்கள்!
பல்கலைக்கழக பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் மீது சரியான நடவடிக்கை கோரி, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், பாராளுமன்றத்தை நோக்கி பேரணி..
புதுதில்லி: பல்கலைக்கழக பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் மீது சரியான நடவடிக்கை கோரி, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் அதுல் ஜோரி. இவர் தங்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக, பல்கலைக்கழக மாணவிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், பேராசிரியர் அதுல் ஜோரியை கைது செய்தனர்.
ஆனால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவரை தில்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்து விட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
Advertisement
இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் அதுல் ஜோரியை நீக்க கோரி தில்லி ஜேஎன்யூ மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வியை தனியார் மையமாக்கும் முயற்சிக்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மாணவர்களுடன் ஆசிரியர்கள் சங்கத்தினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க போலீசார் முயற்சி செய்தனர். இதனால அங்கு பதற்றம் நிலவி வருகிறது.