முகப்பு
இந்தியா

கதுவா சாட்சிகளின் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சிகளாக இருக்கும் மூவர், தாங்கள் போலீஸாரால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி மனு தாக்கல் செய்துள்ளனர்.

Updated On : 15 மே, 2018 at 12:25 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சிகளாக இருக்கும் மூவர், தாங்கள் போலீஸாரால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி மனு தாக்கல் செய்துள்ளனர். உச்ச நீதிமன்றம் அதன் மீது புதன்கிழமை விசாரணை நடத்துகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறாரின் கல்லூரி நண்பர்களான சாஹில் சர்மா, சச்சின் சர்மா, நீரஜ் சர்மா ஆகியோர், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு, வரும் 16-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
அந்த சாட்சிகள் மூவரும் தங்களது மனுவில், இந்த வழக்கில் ஏற்கெனவே காவல்துறையினர் மற்றும் நீதிபதி முன்பாக தங்களது வாக்குமூலங்களை பதிவு செய்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில், மீண்டும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கூறும் போலீஸார், அதற்காக தங்களது குடும்பத்தினருக்கு நெருக்கடி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணையின் பெயரில் சாட்சிகள் மூவரையும், அவர்களது குடும்பத்தினரையும் துன்புறுத்தாமல் இருக்க காவல்துறை குற்றப் பிரிவுக்கு உத்தரவிடக் கோரியுள்ள அந்த மனுவில், பாதிக்கப்பட்ட மூவருக்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, போலீஸாரின் கட்டாயத்தின் பேரிலேயே தாங்கள் வாக்குமூலம் அளித்ததாக அந்த மூவரும், விசாரணை நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், 7 நாள்களுக்குப் பிறகு அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். 
அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறார் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.