பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் சாடல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில், மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில், மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை கடந்த 19 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை மீண்டும் உயர்த்தப்பட்டது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும், டீசல் விலை 21 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. கர்நாடகத் தேர்தலை கருத்தில் கொண்டே பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தேர்தல் முடிந்த மறுநாள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் மற்றும் 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை முன்வைத்து மத்திய பாஜக அரசை ப.சிதம்பரம் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
கர்நாடகத் தேர்தலுக்காக, பெட்ரோல், டீசல் விலை உயர்வில் "இடைவேளை' விடப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்துவிட்டதால் விலையை மீண்டும் உயர்த்திவிட்டனர். மக்கள் மீதான சுமை மேலும் கூடியுள்ளது.
15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கு அனைத்து மாநில முதல்வர்களும் நிதியமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், அரசமைப்புச் சட்டத்தை மீறவும், கூட்டாட்சி அமைப்பை வலுவிழக்கச் செய்யவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்று சிதம்பரம் கூறியுள்ளார்.