முகப்பு
இந்தியா

விமான நிலைய குடியேற்றப் பிரிவு சோதனையில் புதிய நடைமுறை: மத்திய அரசு

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளின் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக, தானியங்கி மின்னணு சோதனை நுழைவாயில்களை (இ-கேட்ஸ்) அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Updated On : 14 மே, 2018 at 5:44 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளின் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக, தானியங்கி மின்னணு சோதனை நுழைவாயில்களை (இ-கேட்ஸ்) அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், தங்களது அடையாள ஆவணங்களைக் காண்பிப்பதற்காக, குடியேற்ற அனுமதி பிரிவில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதற்கு முடிவு கட்டும் விதமாக, விமான நிலையங்களில் தானியங்கி மின்னணு நுழைவாயில்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
சர்வதேச விமான நிலையங்களில் உள்ள பயணிகள் வருகைப் பகுதியில், இந்த மின்னணு நுழைவாயில்கள் அமைக்கப்படும். அந்த வழியாக வரும் வெளிநாட்டுப் பயணி, தனது கடவுச் சீட்டை அங்குள்ள இயந்திரத்தின் மீது வைப்பார். அந்த இயந்திரம், அந்த கடவுச்சீட்டில் உள்ள தகவல்களைப் படிக்கும். அதைத் தொடர்ந்து, அந்தப் பயணி தனது கை விரல்களை மற்றொரு இயந்திரத்தின் மீது வைப்பார். அந்த இயந்திரம், கை விரல் ரேகைகளைப் படித்து, அந்தப் பயணிக்கு அனுமதி அளிக்கும். இந்த எளிய முறையில், யாருடைய குறுக்கீடும் இல்லாமல், சோதனைகளும் இல்லாமல் வெளிநாட்டுப் பயணிகள் குடியேற்ற அனுமதியை ஒரு நிமிடத்துக்குள் பெற்று விட முடியும். அதன் பிறகு அந்தப் பயணி, உடைமைகள் பிரிவுக்குச் சென்று தனது உடைமைகளைப் பெற்றுச் செல்வார்.
இந்தப் புதிய நடைமுறையை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக, குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த நிதி முறைகேடு அல்லது குற்ற வழக்குகளில் தொடர்பில்லாத வெளிநாட்டுப் பயணிகளுக்கு இச்சேவையை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இ-கேட்ஸ் முறையில் குடியேற்ற அனுமதி வழங்கும் நடைமுறை, அமெரிக்காவில் அமலில் உள்ளது. இந்தியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து செல்லும் பயணிகளுக்கு இ-கேட்ஸ் முறையில் அனுமதி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.