பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஊழல்வாதி: காங்கிரஸ் தலைவர் ராகுல் சாடல்
பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஊழல்வாதி என காங்கிரஸ் தலைவர் ராகுல், சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக உரையாற்றிய எடியூரப்பா, தங்களிடம் 104 எம்எல்ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்று கூறி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அங்கு காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி ஆட்சி பதவியேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கர்நாடகத்தில் உள்ள எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவதில் பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக செயல்பட்டத்தை நாம் அனைவரும் அறிவோம். எனவே தற்போது அவர் ஒரு ஊழல்வாதி என்பது அம்பலமாகியுள்ளது. அதுபோல, நாடு முழுவதும் ஊழலை ஒழிப்பதாக கூறிக்கொண்டு பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருவதும் பொய் என்பது தற்போது தெரிந்துவிட்டது.
Advertisement
இதன்மூலம் பாஜக, பிரதமர் நரேந்திர மோடி, கொலைக் குற்றவாளி அமித்ஷா ஆகியோருக்கு பணநாயகத்தை விட ஜனநாயகம் உயர்ந்தது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜக-வை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற நாம் அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில் மக்களின் நம்பிக்கை தான் மிக முக்கியம்.
கர்நாடக மக்கள் மற்றும் காங்கிரஸ், மஜத கட்சியினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தோல்வியின் மூலம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், மக்களின் பலம் மற்றும் ஜனநாயகத்தை அவமதிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
அதுபோல இந்த சட்டப்பேரவை நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கும் போது பாஜக உறுப்பினர்கள் வெளியேறிதை நீங்கள் அனைவரும் கண்டிருப்பபீர்கள் என்பதை அறிவேன். அதுதான் இன்றைய போராட்டத்திலும் நடந்துள்ளது. ஜனநாயகத்தை நசுக்குவதையே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து செய்து வருகிறது என்றார்.