நிதீஷ்குமார் பிறந்த பக்தியார்பூர் நகரத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பிறந்து வளர்ந்த நகரமான பக்தியார்பூர் பெயரை மாற்றம் செய்ய மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரிராஜ்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பிறந்து வளர்ந்த நகரமான பக்தியார்பூர் பெயரை மாற்றம் செய்ய மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரிராஜ் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு பாட்னாவின் புறநகர்ப்பகுதியான தற்போதைய பக்தியார்பூர் மீது டெல்லியின் சுல்தானாக இருந்த குத்புதீன் ஐபக் படையெடுத்து வந்தார். அந்தப் படைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் தளபதியாக பக்தியார் கில்ஜி பொறுப்பேற்றிருந்தார். அந்த பெயரை பின்பற்றியே இந்நகரம் இதுவரை பக்தியார்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நகரத்தின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என அமைச்சர் கிரிராஜ் தெரிவித்தார்.
இக்கோரிக்கையை பிகார் முதல்வர் நிதீஷ்குமார் நிராகரித்தார். இதேபோல, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியும் இக்கோரிக்கைக்கு ஆதரவளிக்க முடியாது என தெரிவித்துள்ளன.
அதேபோல தான் சார்ந்திருக்கும் நவாடா மக்களவை தொகுதியிலுள்ள அக்பர்பூர் நகரத்தின் பெயரையும் மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இந்த பெயருக்கு பதிலாக மாற்றம் செய்ய வேண்டிய பெயரை மத்திய அமைச்சர் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறுகையில், தங்களை பற்றி ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளிவர வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய தகவல்களை பாஜகவினர் வெளியிடுகின்றனர். பக்தியார்பூர் குறித்து பேசுவதற்கு முன் அதன் வரலாற்றை அவர் முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு பலவழிகளிலும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் மக்களின் கவனத்தை ஈர்க்கவும், திசை திருப்பும் வகையில் இதுபோன்ற அறிவிப்புகளை தினந்தோறும் பாஜக வெளியிட்டு வருகிறது என ராஷ்ட்ரீய ஜனதா தளம் செய்தி தொடர்பாளரும், எம்எல்ஏவுமான வீரேந்திரா தெரிவித்தார்.