முகப்பு
இந்தியா

ஹோட்டலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மகனுக்கு ஜாமீன் மறுப்பு   

தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சரணடைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் மகனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 அக்டோபர் 2018, 8:20 pm IST
பகிர்:

புது தில்லி: தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சரணடைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் மகனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.  

பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்தவா் ராகேஷ் பாண்டே. இவரது மகன் ஆஷிஷ் பாண்டே. இவா் தில்லி ஆா்.கே. புரத்தில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 14-ஆம் தேதியன்று ஒருவரை துப்பாக்கியால் மிரட்டி, தகாத வாா்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் மறுநாள் வைரலாகப் பரவியது. போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆஷிஷ் பாண்டே தில்லி நீதிமன்றத்தில் கடந்த 18-ஆம் தேதியன்று  சரணடைந்தார். 

ஆஷிஷ் பான்டேவின் வழக்கறிஞர்கள் சார்பில் அவருக்கு 19-ஆம் தேதியன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்றுநாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு ஆஷிஷ் பான்டேவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

ஆஷிஷ் பான்டே முன்னாள் எம்.பி.யின் மகன் என்பதால் இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க முயல்கின்றன. அவரது துப்பாக்கியை வேண்டுமானால் கோர்ட்டில் ஒப்படைத்து விடுகிறோம். அவருக்கு விசாரணை காவல் அவசியமற்றது என அவர் வாதிட்டார்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், ஆஷிஷ் பாண்டேவை வரும் 22-ம் தேதிவரை போலீஸ் காவலில் மட்டும் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. திங்களன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் திங்களன்று ஆஜர் படுத்தப்பட்ட ஆஷிஷ் பாண்டேவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றத் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் ஆஷிஷ் பாண்டே தரப்பில் செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவினை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.