நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அலை: பிரதமர் மோடி பேச்சு
முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அலை வீசுவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார்.
சில்சார்: முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அலை வீசுவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார்.
அசாம் மாநிலம் சில்சார் மாவட்டத்தில் வியாழன் அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கே அவர் பேசியதாவது:
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு தற்போது நடந்து முடிந்துள்ளது. நாட்டில் சில பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இந்த முதல்கட்டத் தேர்தலில் பாஜகவுக்கு மக்களின் ஆதரவை என்னால் உணர முடிகிறது. மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை உணர்த்தும் விதமாக ஆதரவு அலை வீசுவதை இது நமக்கு உணர்த்துகிறது.
இந்த ஆதரவு அலை கண்டிப்பாக தொடரும். எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அசாமில் வியாழனன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள 5 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறுவது உறுதி. இனி எதிர்க்கட்சிகளுக்கு இங்கு எந்த வாய்ப்பும் இல்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.