முகப்பு
இந்தியா

தொடரும் கனமழை: மும்பைக்கு 'ரெட் அலர்ட்' 

சனிக்கிழமையில் இருந்து தொடரும் கனமழையின் காரணமாக மும்பைக்கு 'ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 ஆகஸ்ட், 2019 at 2:38 PM
பகிர்:

மும்பை: சனிக்கிழமையில் இருந்து தொடரும் கனமழையின் காரணமாக மும்பைக்கு 'ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இந்த ஆண்டு பருவமழை கடுமையாகப் பெய்து வருகிறது. துவக்கத்தில் சில நாட்களாக மிதமாக பெய்து வந்த மழை சனியன்று மீண்டும் கொட்டி தீர்த்தது. மும்பையின் பக்கத்து மாவட்டங்களான தானே,மற்றும் பால்கரில் மிக கனமழையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4 கல்லூரி மாணவிகள் உயிரிழந்தனர்.

அதேபோல் மும்பையில் சியோன் மற்றும் வகோலா ஆகிய பகுதிகளில் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் நீரில் நீந்தியபடியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

Advertisement

கனமழை மற்றும் வெள்ளம் சூழ்ந்துள்ளதன் காரணமாக சியோன் மற்றும் குர்லா இடையேயான நான்கு வழிகளிலும் ஞாயிறு காலை முதல் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது என மத்திய ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுபற்றி மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், 'தொடர்ந்து காற்று வீசக்கூடும்.  மதியம் 4.5 மீட்டர் அளவுக்கு கடலில் அலைகள் உயரே எழும்பும்.  பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்.  கடல் இன்று சீற்றமுடன் காணப்படும்.  அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தியுள்ளது.

மும்பை, தானே மற்றும் பால்கர் பகுதிகளில் திங்கள் காலை வரை கனமழை நீடிக்கும்.  மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஞாயிறன்று மிக அதிக கனமழை பெய்யும் நிலை உள்ளதால்   அப்பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் காவலர்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.