தந்தை மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், தனது மகளுடன் தாய் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தில்லி புறநகர்ப் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா செக்டர் 128-இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் மற்றும் அவரது மகளுடன் வீட்டில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலின் முன் குதித்து அந்தப் பெண்ணின் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அப்பகுதி போலீஸ் அதிகாரி ஸ்வேதாப் பாண்டே கூறுகையில்,
ஆர்.எம்.எல் மருத்துவமனையில் தனது கணவரின் உடலை அடையாளம் காண அந்த பெண் சென்றார். பின்னர் வீடு திரும்பிய பின், தன் மகளுடன் ஒரு அறையில் பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர்களது குடும்பம் கடும் நிதி நெருக்கடிகளை சந்தித்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.