புல்வாமா தாக்குதலில் இறந்த வீரரின் சடலத்துடன் செல்பி எடுத்தாரா மத்திய அமைச்சர்?: வெடித்துள்ள சர்ச்சை
புல்வாமா தாக்குதலில் இறந்த கேரள வீரர் ஒருவரின் சடலத்துடன் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்பி எடுத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.
திருவனந்தபுரம்: புல்வாமா தாக்குதலில் இறந்த கேரள வீரர் ஒருவரின் சடலத்துடன் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்பி எடுத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.
வியாழனன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுநாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் இறந்த கேரள வீரர் ஒருவரின் சடலத்துடன் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்பி எடுத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.
Advertisement
இந்த தாக்குதலில் கேரள மாநிலம் வயநாடை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் வசந்த குமார் விவியும் மரணமடைந்தார். அவருடைய உடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவர்களோடு மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானமும் வீரருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. அப்போது அவர் சடலத்துடன் செல்பி எடுத்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அதன் காரணமாக இதுதான் உங்கள் தேசப்பற்றா? இது நாசிசம்! அவமானகரமான செயல் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே நான் செல்பி எடுக்கவில்லை என அமைச்சர் கண்ணன்தானம் மறுப்பு தெரிவித்துள்ளார்.