இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை.. மோடி பெருமிதம் கொள்ளும் புதிய விஷயம்
இந்திய வரலாற்றில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத மத்திய அரசு இது வென்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
புது தில்லி: இந்திய வரலாற்றில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத மத்திய அரசு இது வென்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தலைமை தாங்கிப் பேசிய பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், பாஜக அரசின் மூலம், ஊழல் இல்லாமல் நாட்டை வழிநடத்த முடியும் என்பதையும், அதன் மூலம் நாடு மாற்றத்தைக் காணும் என்பதையும் நிரூபித்துள்ளோம்.
ஏழ்மை நிலை காரணமாக தங்களது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் காண முடியாத இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு என்பது அவசியம்.
முந்தைய ஆட்சியாளர்கள் விவசாயிகளை வெறும் வாக்காளர்களாகவே பார்த்தனர். ஆனால் பாஜக ஆட்சியில், அவர்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முயன்று வருகிறது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் ஊதியம் இரண்டு மடங்காக உயர வேண்டும் என்பதற்காக நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம்.
அயோத்தி விவகாரத்தில் சுமூகமான முடிவு எட்டப்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை. தொடர்ந்து வழக்குரைஞர்கள் மூலம் தடையை ஏற்படுத்தி வருகிறது.
நாடுதான் இனி முடிவு செய்ய வேண்டும், தங்களுக்கு பிரதானமாக உழைக்கப் போவது யார், மாதக்கணக்கில் விடுமுறை எடுத்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றவரா அல்லது ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் கடுமையாக ஓய்வின்றி உழைப்பவரா? என்று மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.