தில்லியில் சம்பவம்: ஓயாத சண்டையால் வெறுப்படைந்து இரண்டு மனைவிகளையும் கொன்றவர் கைது
ஓயாமல் சண்டைப் போட்டுக் கொண்டதால் வெறுப்படைந்த தில்லிவாசி தனது இரண்டு மனைவிகளையும் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார்.
புது தில்லி: ஓயாமல் சண்டைப் போட்டுக் கொண்டதால் வெறுப்படைந்த தில்லிவாசி தனது இரண்டு மனைவிகளையும் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் நடந்த கொலை சம்பவத்தில், தில்லி ஜெய்த்புர் பகுதியைச் சேர்ந்த ஜாம்ஷெட் ஆலம் (35) நேற்று கைது செய்யப்பட்டார்.
ஒரு அறையை வாடகை எடுத்து தங்கியிருந்த ஆலம், அங்கு தனது இரண்டு மனைவிகளான இஸ்மத் பர்வீன் (34), ஜபீனா (45) மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வந்தார்.
திடீரென கடந்த வாரம் அறை திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் புகார் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளேச் சென்ற போது அங்கே இரண்டு பெண்களும் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.
விசாரணையில், இருவரையும் கொலை செய்துவிட்டு ஆலம் தனது மகனுடன் தப்பிச் சென்றது தெரிய வந்தது. அவரது சொந்த ஊரான பிகாருக்குச் சென்று அவரைக் கைதுசெய்ய காவல்துறை விரைந்தது. ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். பிறகு அவரது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் தனது மனைவிகளைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ஓயாமல் சண்டைபோட்டுக் கொண்டதால் ஆத்திரத்தில் இருவரையும் அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும், அப்போது வெளியே விளையாடிக் கொண்டிருந்த மகனுக்கு இது தெரியாததால், உடனடியாக உடைமைகளை எடுத்துக் கொண்டு மகனுடன் அங்கிருந்து கிளம்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.