பிகாரில் 153 குழந்தைகள் மரணம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
பிகாரில் மூளை அழற்சி நோயால் 153 குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் குறித்து மத்திய மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: பிகாரில் மூளை அழற்சி நோயால் 153 குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் குறித்து மத்திய மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் மரணம் அடைந்தது குறித்து விரிவான பதில் மனுவை இன்னும் 7 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
பிகார் மாநிலத்தில் மூளை அழற்சி நோயால் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இதுவரை 153 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் இந்த நோய் பரவியுள்ளது. 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு உள்ள இடங்களில் நீரில் கரைத்து குடிப்பதற்காக இலவசமாக குளுக்கோஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் செலவு, தனியார் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிப்பது என அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிகாரில் குழந்தைகள் மரணம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் பதில் மனு கோரியுள்ளது உச்ச நீதிமன்றம்.