முகப்பு
இந்தியா

ஒரு கோடி செலவு செய்து எம்பிபிஎஸ் படிக்கும் டாக்டர்களின் ஊதியம் ஜஸ்ட்..!

நீங்க என்னவா ஆகப் போறீங்க? எந்தக் குழந்தையிடம் இதைக் கேட்டாலும் சொல்லும் பதில் டாக்டர். உண்மையிலேயே டாக்டர் ஆவது என்பது பலரது கனவாக இருந்தாலும் அது நிஜமாவது சிலருக்குத்தான்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:20 AM
பகிர்:


புது தில்லி: நீங்க என்னவா ஆகப் போறீங்க? எந்தக் குழந்தையிடம் இதைக் கேட்டாலும் சொல்லும் பதில் டாக்டர். உண்மையிலேயே டாக்டர் ஆவது என்பது பலரது கனவாக இருந்தாலும் அது நிஜமாவது சிலருக்குத்தான்.

அப்படி சிலருக்கு அந்த கனவு மெய்யானாலும், அதன் பிறகும் அவர்களுக்கு பல சங்கடங்கள் இருக்கத்தான் செய்கிறது. பலரது கனவாக இருக்கும் மருத்துவம் நாம் வெளியில் இருந்து பார்ப்பது போல அவ்வளவோ படோபகாரமாக இல்லை என்கிறது கிடைத்திருக்கும் தகவல்கள்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் 5 ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.1 கோடி வரை செலவிட்டு மருத்துவம் பயில்கிறார்கள். ஆனால், அவர்கள் படித்து முடித்து மருத்துவமனைகளில் வேலைக்கு சேரும் போது அவர்களது வருவாய் ரூ.50 ஆயிரமாகவே இருக்கிறது. அவர்கள் அங்கு பயிற்சி மருத்துவராக மட்டுமே பணியாற்ற முடியும் என்பதால்.

Advertisement

இது ஏதோ சிறிய மருத்துவமனைகளில் மட்டுமல்ல, இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 25 மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு கல்லூரிகளில், எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சத்துக்கும் குறைவாகவே ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.

மிகப் பெரிய மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுரிகளிலேயே இளம் மருத்துவர்களுக்கு இவ்வளவுக் குறைவான ஊதியம் கொடுத்து பணிக்கு நியமிக்கும் போது, அங்கு கிடைக்கும் மருத்துவ சிகிச்சையும், அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சையை விட பெரிதாக ஒன்றும் இருந்துவிடுவதில்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ பேராசிரியர்கள் கூறுகிறார்கள்.

உதாரணமாக இந்த புகைப்படத்தைப் பாருங்கள். சென்னையில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் எம்பிபிஎஸ் பயில, ஆண்டுக் கட்டணம் ரூ.22 லட்சம். அதுவே அங்கே பணியாற்றும் எம்பிபிஎஸ் மருத்துவரின் ஆண்டு ஊதியம் ரூ.4.20 லட்சம் மட்டுமே.

புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க ஒரு ஆண்டுக்கு 20 லட்சம் கட்டணம், எம்பிபிஎஸ் மருத்துவருக்கு ஆண்டு ஊதியம் ரூ.5.76 லட்சம் மட்டுமே. இதுதான் போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லுரிகளின் நிலையுமாக உள்ளது.

எனவே, மருத்துவம் படித்துவிட்டால் போதும் என்று நினைப்பவர்களும், மருத்துவர்களைப் பார்த்து ம்ம்.. இவர்களுக்கென்ன என்று அங்கலாய்ப்பவர்களும் தங்களது மனநிலையை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments