ராணுவ வீரர்களின் சடலத்தை வைத்து அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா? மோடிக்கு மம்தா கேள்வி
ராணுவ வீரர்களின் சடலத்தை வைத்து சந்தர்ப்பவாத அரசியல் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணுவ வீரர்களின் சடலத்தை வைத்து சந்தர்ப்பவாத அரசியல் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹவுரா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,
"கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் எதுவும் செய்யாததால், உங்களுக்கு குண்டுகளையும், ராணுவ வீரர்களின் சடலங்களையும் காண்பிக்க வேண்டியுள்ளது. ராணுவ வீரர்களின் சடலங்களை வைத்து சந்தர்ப்பவாத அரசியலை செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நாட்டுக்காக நாங்கள் அனைவரும் ராணுவத்துடன் துணை நிற்போம். ஆனால், மோடியின் ஆட்சிக்காக துணை நிற்கமாட்டோம்.
பாலாக்கோட்டில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினால், கேள்வி எழுப்புபவர்கள் பாகிஸ்தானியர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.
நாம் அனைவரும் அண்டை நாட்டை சேர்ந்தவர்கள், மோடி மட்டும் தான் இந்தியர்.
தேசப்பற்று குறித்து பாடம் கற்றுத் தருவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும். தேசப்பற்றை நாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளத் தேவையில்லை. நாம் நாட்டுக்காக இருக்கிறோம். மத்தியில் தவறிழைத்த மோடியின் ஆட்சிக்காக அல்ல. மோடி மற்றும் அமித்ஷாவின் அடையாளத்தை நாட்டில் இருந்து அகற்றுவோம். ஒன்று இந்த நாடு தப்பிக்கும் இல்லையெனில் அவர்கள் ஜெயித்துவிடுவார்கள். இந்த அரசை எவ்வளவு விரைவில் வீழ்த்துகிறோமோ நாட்டுக்கு அவ்வளவு நல்லது.
எனது மதம் குறித்து பாஜகவினர் வலைதளங்களில் தினமும் தேடி வருகின்றனர். எனது மதம் மனிதநேயம் என்பதை நான் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவினர் கையில் ரத்தக்கறை உள்ளது. அதனால், அவர்கள் இதை கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
நாம் பல்வேறு அரசை பார்த்திருக்கிறோம். ஆனால், வில்லனை போல் நாட்டில் உள்ள அனைவரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு பிரதமரை இதுவரை பார்த்ததில்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர், 12,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மோடிக்கு தகவல்களை எப்படி திரித்து சொல்ல வேண்டும் என்பது மட்டுமே தெரியும்" என்றார்.