மும்பை: புதன்கிழமை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.
மும்பையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தனது ராஜினாமா முடிவை தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார்.
ஏற்கனவே துணை முதல்வர் அஜித் பவார் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னவீஸிடம் அளித்திருந்த நிலையில், செய்தியாளர்கள் முன்னிலையில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர ஃபட்னவீஸும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் பகத்சிங் கோஷியாரியிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவிருப்பதாகவும் ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.
மேலும் படிக்க.. மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடத்தப்பட வேண்டும்? உச்ச நீதிமன்றம் பதிவு செய்திருந்த விஷயங்கள்
தனது ராஜினாமா முடிவை அறிவிக்கும் முன்னதாக, தேவேந்திர ஃபட்னவீஸ் பேசுகையில், தேர்தலின் போது சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்று பாஜக சிவசேனைக்கு எந்த வாக்குறுதியும் தரவில்லை. சிவேசேனையை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், பாஜகவின் எண்ணிக்கை குறைந்த பிறகு சிவசேனை பேரத்தில் ஈடுபடத் தொடங்கியது என்று தேவேந்திர ஃபட்னவீஸ் குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வாய்ப்பு இல்லை
மகாராஷ்டிர முதல்வரும், துணை முதல்வரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், பேரவையில் நாளை நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வாய்ப்பு இல்லாமல் போனது.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாககெடுப்பை எதிர்கொள்ளாமலேயே தனது தோல்வியை ஒப்புக் கொண்ட ஃபட்னவீஸ் பாஜக எந்தக் கட்சியையும் உடைக்காது; குதிரை பேரத்தில் ஈடுபடாது. மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.