அனைத்து தகவல்களையும் அரசாங்கமே பொதுத் தளத்தில் வெளியிட்டு, ஆர்டிஐ பயன்பாட்டைக் குறைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஆணையத்தின் 14-வது ஆண்டு மாநாடு இன்று (சனிக்கிழமை) தில்லியில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,
"ஆர்டிஐ சட்டம் இயற்றிய பிறகு, அனைத்து நாடுகளும் தகவல்களை பொதுத் தளத்தில் வெளியிடுவதை நிறுத்திவிட்டது. ஆனால், இந்திய அரசு அந்த கோணத்தில் சிந்திக்காது.
ஆர்டிஐ கீழ் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நிர்வாகத்தை அமைக்கவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது. யாரும் ஆர்டிஐ விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டியத் தேவை இருக்காது.
மேலும் படிக்க: நிறைவேறியது ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா!
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து அரசின் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படவில்லை. ஆர்டிஐ மூலம் விண்ணப்பம் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்பட்சத்திலும், அதன் பயன்பாட்டைக் குறைக்கும் ஒரு நிர்வாகமே சிறந்ததாகும். அரசாங்கமே அனைத்து தகவல்களையும் பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும். இதன்மூலம், ஆர்டிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்ற உணர்வே மக்கள் மத்தியில் எழாது.
சுதந்திரத்துக்கு முன்பும் சரி, 2005-இல் ஆர்டிஐ சட்டம் நடைமுறைக்கு வரும் வரையிலும் சரி, மக்கள் மற்றும் நிர்வாகத்தினரிடையே ஒரு பிளவை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த 14 ஆண்டுகளில் மக்கள் மற்றும் நிர்வாகத்தினரிடையே இருக்கும் இடைவெளியைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்டிஐ சட்டம் நிர்வாக முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது" என்றார்.