பினாகுரி: அஸ்ஸாம் மாநிலத்தில் உணவு தேடி ஒரு அழையா விருந்தாளி சமையலறைக்குள் நுழைந்த விடியோ டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒரு வேளைக்கு 10க்கும் மேற்பட்டோருக்கு சமையல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் உணவு செயலிகள் வந்த பிறகு, சமையலறைகளே எப்போதாவது குடிநீருக்காக வந்து செல்லும் அறைகளாக மாறிவிட்டன.
உணவு நேரத்தின் போது ஒரே ஒரு விருந்தாளி வீட்டுக்கு வந்தாலே, அவருக்கு என்ன செய்வது என்று திண்டாடுவது வழக்கம்.
ஆனால், அஸ்ஸாம் மாநிலம் பினாகுரியில் உள்ள ராணுவ சமையல் கூடத்துக்கு அழையா விருந்தாளி ஒருவர் நுழைந்து உணவு தேடும் விடியோ டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. அந்த விடியோவில், ஒரு வீடு போன்ற கட்டடத்துக்குள் யானை ஒன்று நுழைந்து உணவு தேடிக் கொண்டிருக்கிறது. எதுவும் கிடைக்காததால், மிகச் சிறிய கதவுக்குள் தனது உடலை குறுக்கியபடி நுழைந்து வெற்றிகரமாக சென்று விடுகிறது.
ஆனால் அதற்கு உணவு கிடைத்ததா? என்பது தெரியவில்லை. இந்த விடியோவில், தனது வயிற்றுப்பாட்டுக்காக உணவு தேடி, தனது உடலைக் குறுக்கி சமையலறைக்குள் நுழையும் யானையைப் பார்க்கும் போது, ஸ்விக்கி, ஸொமாட்டோ என உணவுக்குக் கூட செயலிகளை எல்லாம் உருவாக்கிய மனிதன், வன உயிரினங்களின் வாழ்விடங்களைக் கூட பறித்துக் கொண்டு இப்படி சமையலறை சமையலறையாக அலைய விட்டுவிட்டானே என்ற ஆதங்கத்தையே ஏற்படுத்துகிறது