இடைக்காலத் தலைவராக சோனியா நீடிப்பார்: நிறைவுற்றது செயற்குழுக் கூட்டம்
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என காங்கிரஸ் தலைவர் கே.ஹெச். முனியப்பா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என காங்கிரஸ் தலைவர் கே.ஹெச். முனியப்பா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை விவகாரம் பற்றி கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்த சூழலில் இன்று (திங்கள்கிழமை) செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. காலை 11.30 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டம் மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கே.ஹெச். முனியப்பா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:
"கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர வேண்டும். விரைவில் தேர்தல் நடைபெறும். இதுதான் செயற்குழுவின் ஒருமித்த முடிவு. கட்சியின் தலைமை பற்றி மாறுபட்ட கருத்துகள் இல்லை." என்றார் அவர்.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், "ஒரு ஆண்டுக்குள் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டும் என்று செயற்குழுவில் பேசப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இதற்கான நடைமுறையை 6 மாதங்களில் தொடங்க வேண்டும் என்றனர். கட்சியின் கூட்டம் 6 மாதங்களில் கூடவுள்ளது. அதன்பிறகு, கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்" என்றனர்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.