புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,151 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 32 லட்சமாக உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் கரோனா பாதித்த 1,059 பேர் பலியாகியுள்ளனர். இதனால், நாட்டில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 59,449 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், நாட்டில் இன்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 32,34,475 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7,07,267 ஆக உள்ளது. இதுவரை கரோனா பாதித்து 24,67,759 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா பரிசோதனை அதிகரித்து வரும் அதே வேளையில், நாடு முழுவதும் பரவலாக கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை கரோனாவுக்கு பலியானோரில் 69 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் 31 சதவீதம் பேர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது.