பாகிஸ்தான் முழுவதும் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் குறைந்தது 106 பேர் இறந்துள்ளனர் மற்றும் 52 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,
பாகிஸ்தானில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 106 பேர் பலியாகியுள்ளனர். இதில், மழை வெள்ளத்திற்கு சிந்து மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இங்கு, பலர் தங்கள் வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கராச்சியில் மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிந்து மாகாணத்தில் 80 பேர் கொல்லப்பட்டதாக முதல்வர் சையத் முராத் அலி ஷா வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
கராச்சியில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 604 மி.மீ மழை பெய்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மொத்தம் 29 பேர் கொல்லப்பட்டனர், அதேபோல் 196 வீடுகள் இழந்துள்ளனர். மேலும் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் வெளியேறும் நீரால் இரண்டு பாலங்கள் மற்றும் மூன்று மசூதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பலூசிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழையானது பேரழிவுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது. ஏராளமானோர் வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதில், 15 பேர் கொல்லப்பட்டனர், 7 பேர் காயமடைந்தனர் மற்றும் 907 வீடுகள் சேதமடைந்ததாக என்.டி.எம்.ஏ தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில், கில்கிட்-பால்டிஸ்தான் பகுதி மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12, 10 மற்றும் ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இதுவரை கூடாரங்கள், 409.6 டன் உணவுப் பொருள்கள், 2,956 போர்வைகள், கொசு வலைகள் உள்ளிட்டவற்றை என்டிஎம்ஏ வழங்கியுள்ளது.
இந்தாண்டு, பருவமழையானது வழக்கத்தை விட அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.