அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் கோடிக்கணக்கானவர்களுக்கு பலத்தை தருகிறது: மோடி
அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் கோடிக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தை தருகிறது என்று அவரது நினைவு நாளில் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
புதுதில்லி: அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் கோடிக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தை தருகிறது என்று அவரது நினைவு நாளில் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதையும், இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சருமான டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி தில்லியில் காலமானார். அவர் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் செய்த பணிகள் எண்ணில் அடங்காதவை. பட்டியல் சாதி மக்களுக்கென கழகம், அரசியல் அமைப்பு சட்டம், தீண்டாமை ஒழிப்பு, திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தது வரை இவரது பங்களிப்பு மிக முக்கியமானது.
அவரது நினைவு நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரை பக்க பதிவில், அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் கோடிக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தை தருகிறது.
நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று மோடி பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அம்பேத்கரின் பங்களிப்பை இன்று நாம் நினைவில் கொள்வோம். இந்தியாவை அனைத்து விதமான பாகுபாடுகளிலிருந்தும் விடுவிக்க உழைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.