முகப்பு
இந்தியா

விவசாயிகள் போராட்ட களத்துக்கு அருகே பஞ்சாப் வழக்குரைஞர் தற்கொலை

தில்லி எல்லையில் விவசாய அமைப்புகளின் போராட்ட களத்துக்கு அருகில் பஞ்சாப் மாநில வழக்குரைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 28 டிசம்பர், 2020 at 8:57 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:44 PM

தில்லி எல்லையில் விவசாய அமைப்புகளின் போராட்ட களத்துக்கு அருகில் பஞ்சாப் மாநில வழக்குரைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 பஞ்சாப் மாநிலம், ஃபசில்கா மாவட்டம், ஜலாலாபாத்தைச் சேர்ந்த அமர்ஜித் சிங் என்ற அந்த வழக்குரைஞர், "புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அவர்களின் குரலுக்கு மத்திய அரசை செவிமடுக்க வைக்கும் விதமாகவும் எனது உயிரை தியாகம் செய்கிறேன்' என்று தனது தற்கொலை குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
 விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஏற்கெனவே இரண்டு தற்கொலைகள் நடந்துள்ள நிலையில், இப்போது மூன்றாவது நபராக அமர்ஜித் சிங் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
 "விவசாயிகளின் வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை' என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டு சந்த் ராம் சிங் என்ற பஞ்சாபைச் சேர்ந்த சீக்கிய மத போதகர் தில்லியின் சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்ட களத்தில் இந்த மாத தொடக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
 அதுபோல, தில்லி எல்லைப் பகுதி போராட்ட களத்திலிருந்து பஞ்சாப் மாநில பதிண்டா பகுதிக்கு திரும்பிய 22 வயது இளம் விவசாயி ஒருவர் அண்மையில் தற்கொலை செய்தார்.
 ஒரு வாரத்துக்கு முன்பாக, தில்லியின் சிங்கு எல்லையில் பஞ்சாபைச் சேர்ந்த 65 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
 அதன் தொடர்ச்சியாக, பஞ்சாபைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
 "மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களால், தாங்கள் வஞ்சிக்கப்பட்டது போன்ற எண்ணம் விவசாயிகள், தொழிலாளர்கள் போன்ற சாதாரண மக்களிடையே எழுந்துள்ளது. இந்த மோசமான வாழ்க்கை தவிர்க்க முடியாதது. விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசை செவிமடுக்க வைக்கும் விதமாகவும் எனது உயிரை தியாகம் செய்கிறேன்' என்று அந்த தற்கொலை குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 அவர் இந்த தற்கொலை குறிப்பை கடந்த 18-ஆம் தேதி எழுதியுள்ளார். இதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 இதுகுறித்து ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வழக்குரைஞரின் உயிரிழப்பு குறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளோம். அவர்கள் இங்கு வந்ததும், அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவருடைய உயிரிழப்பு தற்கொலைதான் என்பதை மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்' என்றார்.
 மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு 30 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.