நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!
மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றது பற்றி...
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினராக இன்று(ஏப். 10) பதவியேற்றுக் கொண்டார்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த அவர், பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை, சட்ட மேலவை, மக்களவை என பல்வேறு பதவிகளில் இருந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று விரும்புவதாக நிதீஷ் குமார் கூறியிருந்தார்.
Advertisement
இதைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி.யாக இன்று (ஏப். 10) நிதீஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். நேற்று பிகாரில் இருந்து தில்லி சென்ற அவர், இன்று மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பாஜக எம்.பி.க்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பிகாரில் அடுத்த முதல்வர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படாததால் அவர் இன்னும் முதல்வர் பதவியில் இருந்து விலகவில்லை. ஓரிரு நாள்களில் நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று ஜேடியு மூத்த தலைவர் விஜயகுமார் சௌத்ரி கூறியுள்ளார்.
வருகிற ஏப். 14 ஆம் தேதி பிகாரில் புதிய முதல்வர் பதவியேற்பார் என்றும் தற்போதைய துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரிக்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே 10 முறை முதல்வராகப் பதவியேற்றவர் என்ற பெருமைக்குரியவர் நிதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.