ஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் ஏப்ரல் 10-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக பிகார் பாஜக தலைவர் சஞ்சய் சரோகி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் ஏப்ரல் 10-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக பிகார் பாஜக தலைவர் சஞ்சய் சரோகி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்த ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு பிகார் முதல்வர் பதவியில் இருந்து அண்மையில் விலகுவதாக அறிவித்தார். கூறியபடியே அவர் பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனினும் பிகாரில் அடுத்த முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளதால் அவர் இன்னும் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை. முன்னதாக தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமார் வருகிற ஏப். 13 ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
பிகாரின் புதிய முதல்வராக கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பிகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதீஷ் குமார் 10 ஆவது முறையாக பிகாரின் முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.