விஸ்வாசம் கோட்சேவுக்கா, காந்திக்கா என்பதை மோடி நிரூபிக்க வேண்டிய நேரம் இது: காங்கிரஸ்
மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை நாடகம் என்று கூறிய பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே மீது தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை நாடகம் என்று கூறிய பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே மீது தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில்,
"மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பாஜக அரசும், பிரதமரும் நேர்மையாக இருந்தால் நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் அவருடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவிக்கையில்,
"நாட்டின் சுதந்திரத்துக்காக பாஜக போராடவும் இல்லை, தியாகம் எதையும் செய்யவும் இல்லை. எனவே, சுதந்திரப் போராட்ட இயக்கத்தை அவர்கள் நாடகம் என்று அழைக்கலாம். இதுபோன்ற கருத்துகள் அவர்களுடைய உண்மை மனநிலையை வெளிப்படுத்துகிறது. காந்தியின் பெயரை அவர்கள் வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். மற்றபடி அவரைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை" என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் பேசுகையில்,
"தன்னுடைய விஸ்வாசம் கோட்சேவுக்காக அல்ல காந்திக்கா என்பதை பிரதமர் நிரூபிக்க வேண்டிய நேரம் இது. மகாத்மா காந்தியைத் தொடரந்து அவமதித்து வரும் பிரக்யா தாக்கூர் மீது பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தற்போது 'காந்தி வெறுப்பு' கூட்டத்தில் அனந்தகுமார் ஹெக்டே இணைந்துள்ளார். ஹெக்டேவின் கருத்துக்கு பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் மீது தேசத்துரோக வழக்கைப் பதிய வேண்டும். அனுராக் தாக்கூரும், ஹெக்டேவும் பாஜகவில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என்றார்.