2019 புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏழாவதாக ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.
புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளுக்கு உதவியதாக புல்வாமா மாவட்டத்தின் காகபூரா பகுதியைச் சேர்ந்த பிலால் அகமது என்பவரை என்ஐஏ கடந்த 5-ஆம் தேதி காவலில் எடுத்தது. இதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 10 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
முக்கியக் குற்றவாளிகள் பிலாலின் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டதாகவும், அவர்களை இந்தத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டி பாதுகாப்பு அளித்தவர்களிடம் பிலால்தான் அறிமுகப்படுத்தியதாகவும் என்ஐஏ கருதுகிறது.
பிலால் விலையுயர்ந்த மொபைல் போன்களை வைத்திருந்ததாகவும், அதன்மூலமாகவே பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடத்தைத் தொடர்புகொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் புட்காம் பகுதியைச் சேர்ந்த இக்பால் என்பவரை என்ஐஏ கைது செய்திருந்தது. இந்தத் தாக்குதலை இக்பால் நடத்தியதாகவும், சதித் திட்டத்தைத் தீட்டிய முக்கியக் குற்றவாளியான முகமது உமர் ஃபரூக் 2018 ஏப்ரலில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பிறகு, காஷ்மீர் வந்தடைய இக்பால் உதவியதாகவும் கூறப்படுகிறது.