முகப்பு
இந்தியா

அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸுக்கும் பாடம் கற்பிக்க நேரம் பார்த்துக் காத்திருந்தோம்: மாயாவதி

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸுக்கும் பாடம் கற்பிப்பேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
பகிர்:

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸுக்கும் பாடம் கற்பிக்க தகுந்த நேரம் பார்த்து காத்திருந்ததாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதல் மாநில அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனது கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இணைந்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், 'காங்கிரஸுக்கு எதிராக நாங்கள் முன்னதாகவே நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸூக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் பாடம் கற்பிக்க தகுந்த நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த தனது கட்சியின் 6 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை கூட செல்வேன்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸில் இணைந்ததற்கு எதிராக பாஜக சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு பகுஜன் சமாஜ் கட்சி கூறியுள்ளது. 

ராஜஸ்தானில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், சட்டப்பேரவையில் அசோக் கெலாட்டுக்கு பெரும்பான்மை கிடைக்க பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள்தான் உதவியுள்ளனர். தற்போது அசோக் கெலாட்டுக்கு பெரும்பான்மையை விட கூடுதலாக ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கெனவே ராஜஸ்தான் அரசியல் சூழலில் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், தற்போது பகுஜன் சமாஜ் கட்சியும் நீதிமன்றத்தை நாடியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →