ஹைதராபாத்: தெலங்கானாவில் 20 வயது கர்ப்பிணி மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவத்தில், காவல்துறை நடத்திய விசாரணையில் ஆணவக் கொலை என்று தெரிய வந்துள்ளது.
கலுக்குண்ட்லா என்ற பகுதியில் ஜூன் 7-ம் தேதி நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மகளை பெற்றோரே தலையணை வைத்து அழுத்திக் கொன்றுவிட்டு, மாரடைப்பால் இயற்கையாக மரணம் அடைந்தது போல நாடகமாடினர்.
கல்லூரி மாணவியான அப்பெண்ணின் மரணம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பெண்ணின் பெற்றோரை கொலை வழக்கில் கைது செய்தனர்.
விசாரணையில், மூன்று பெண் பிள்ளைகளில் கடைசி மகள்தான் கொலை செய்யப்பட்டவர். கல்லூரியில் படித்து வரும் அவர், ஒருவரை காதலித்து, கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பமானது தெரிய வந்த நாள் முதலே கர்ப்பத்தைக் கலைத்துவிடுமாறு பெற்றோர் வலியுறுத்தி வந்துள்ளனர்.
விஷயம் வெளியே தெரிந்தால் குடும்பத்துக்கு அவமானம் என்று கருதிய பெற்றோர், மகளை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.