இந்தியாவில் தொடர்ந்து 3ஆவது நாளாக 10 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,929 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,929 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கரோனா பரவி வருகிறது. தொடக்கத்தில் மெதுவாக பாதிப்பை ஏற்படுத்தி வந்த கரோனா கடந்த சில தினங்களாக தீவிரமடைந்து வருகிறது. உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த நான்காமிடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கரோனா பாதிப்பு மகாரஷ்டிர மாநிலத்தில் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து 3ஆவது நாளாக கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,993லிருந்து 3,20,922 ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 311 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 8,884லிருந்து 9,195 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 1,54,330லிருந்து 1,62,379 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கரோனா பாதித்த 1,49,348 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.