நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 57.43% ஆக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
"நாடு முழுவதும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு ஆய்வகங்கள் 734 மற்றும் தனியார் ஆய்வகங்கள் 273 என மொத்தம் 1,007 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 13,012 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2,71,696 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 57.43% ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 1,86,514 பேர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் சராசரியாக 33.39 பேர் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதன் உலகளவிலான சராசரி 120.21 ஆக உள்ளது. இதேபோல் ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் கரோனா தொற்றால் பலியாவோர் விகிதமும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் சராசரியாக 1.06 பேர் பலியாகின்றனர். இதன் உலகளவிலான சராசரி 6.24.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தலைமையிலான மத்தியக் குழு ஜூன் 26 முதல் ஜூன் 29 வரை குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானாவுக்குச் செல்கிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்க மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஒருங்கிணைந்து செயல்படவுள்ளனர்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.