குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 15,013 குழந்தைகள் இறப்பு: அமைச்சர் தகவல்
குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக பாஜக அரசை, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்புப் பிரிவில் சிகிச்சையின் போது 15,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இதுகுறித்து எழுப்பிய கேள்விகளுக்கு துணை முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சருமான நிதின் படேல் பதில் அளித்தார்.2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 6 லட்சம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில், சிகிச்சையின் போது 15,013 குழந்தைகள் இறந்ததாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, 'குஜராத்தில் 15,013 குழந்தைகள் இறந்ததற்கு பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும். குஜராத்தில் தினமும் 20 பிறந்த குழந்தைகள் இறக்கின்றனர், ஆமதாபாத்தில் அதிகபட்சமாக 4322 குழந்தைகள் இறந்துள்ளனர்' என்றார். மேலும், ஆமதாபாத், அமித் ஷாவின் நாடாளுமன்றத் தொகுதி என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, குஜாரத்த்தில் குழந்தைகளின் அழுகை கேட்கப்படுமா? குழந்தை இறப்பு குறித்து யாரேனும் கேள்விகளை எழுப்புவார்களா? இந்த விஷயத்தில் ஊடகங்கள் தைரியம் காட்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.