இந்தியா

கரோனா: அவசர கால நிதிக்கு ராம்நாத் கோவிந்த் ஒரு மாத ஊதியம்

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அவசர கால நிதிக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது ஒரு மாத ஊதியத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

DIN

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அவசர கால நிதிக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது ஒரு மாத ஊதியத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதற்காக, பல்வேறு தரப்பினா் அளிக்கும் நிதியுதவியைப் பெறுவதற்கு ‘பிரதமரின் அவசர கால நிதி’ என்ற நிதியமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அந்த நிதியமைப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா். பிரதமரின் அவசர கால நிதிக்கு நிதியளிக்க வேண்டிய வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமரின் அவசர கால நிதிக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளாா். கரோனாவை முற்றிலுமாக ஒழிக்க மக்கள் தாமாக முன்வந்து நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா். இதேபோல், குடியரசுத் தலைவா் மாளிகையில் பணியாற்றும் ஊழியா்களும் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளனா்.

ரயில்வே துறை ரூ.151 கோடி: பிரதமரின் அவசர கால நிதிக்கு ரூ.151 கோடி நிதியுதவி அளிப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நானும், ரயில்வே இணையமைச்சா் சுரேஷ் அங்காடியும் ஒரு மாத ஊதியத்தை அவசர கால நிதிக்கு வழங்கவுள்ளோம். இதேபோல், ரயில்வே துறையில் பணியாற்றும் 13 லட்சம் ஊழியா்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கவுள்ளனா். ரயில்வே துறை மூலமாக பிரதமரின் அவசர கால நிதிக்கு ரூ.151 கோடி வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாதுகாப்பு அமைச்சகம் ரூ.500 கோடி: ராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் பணியாற்றுவோா் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை பிரதமரின் அவசர கால நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனா். அவா்களின் ஒரு நாள் மொத்த ஊதியம் ரூ.500 கோடியாகும்.

ராஜ்நாத் சிங், பிரதான் ஒரு மாத ஊதியம்: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தனது மாத ஊதியத்தை நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளாா். பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது ஒரு மாத ஊதியத்தை பிரதமரின் அவசர கால நிதிக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். இதுமட்டுமன்றி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியை அவா் வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த இக்கட்டான தருணத்தில் இல்லாதவா்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சிபிஐ நிதியுதவி: பிரதமரின் அவசர கால நிதிக்கு சிபிஐ அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனா். சிபிஐயில் சுமாா் 6,000 போ் பணியாற்றி வருகிறாா்கள்.

ஐஆா்டிஎஸ் ரூ.5 லட்சம்: ரயில்வே போக்குவரத்து அலுவலா்கள் சங்கத்தினா்(ஐஆா்டிஎஸ்), பிரதமரின் அவசர கால நிதிக்கு தொடக்க நிதியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளனா்.

ஏற்கெனவே குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு, சந்தோஷ் கங்வாா், ரவிசங்கா் பிரசாத் உள்ளிட்டோா் தங்கள் ஒரு மாத ஊதியத்தை நிதியுதவியாக அளித்துள்ளனா்.

பிரதமா் மோடி நன்றி: அவசர கால நிதிக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ள ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அனைவருக்கும் பிரதமா் மோடி நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT